

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (பிப்.27), தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், பிப்.28 முதல் மார்ச் 1-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், மார்ச் 2-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 4-ம் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் தலா 7 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை, சிற்றாறில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.