

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு இடையே திகாவிர்க்கு அருகில் நாளை கரையை கடக்கக்கூடும்.
தமிழகத்தில் நாளையும் (ஜூலை 6), நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 8-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், ஜூலை 9 முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் தலா 8 செமீ, ஊத்தில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானி, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.