

சென்னை: பொதுப்பணித் துறையில் ரேடியோ மேற்பார்வையாளர் என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் தற்போது புதிதாக ரேடியோ மேற்பார்வையாளர் (Radio Supervisor) என்ற புதிய பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நேரடி நியமன முறையில் நிரப்பப்படும் இந்த பதவிக்கு கல்வித் தகுதியாக, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளமா படிப்பு (டிசிஇ) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசாணையை பொதுப்பணித் துறையின் செயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
பொதுப்பணித் துறையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரேடியோ மேற்பார்வையாளர் பதவிக்கு பொறியியல் டிப்ளமா படிப்பு கல்வித் தகுதியாக இருப்பதால் இப்பதவியானது டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி பதவிகள்) வாயிலாக நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சி-யின் 2026 தேர்வுக் கால அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) அறிவிப்பு ஜூலை 7-ம் தேதி (செவ்வாய்) வெளியிடப்படுகிறது. இதற்கான தேர்வு செப். 20-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பில் பொதுப்பணித் துறை ரேடியோ மேற்பார்வையாளர் பணியிடம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.