

புதுச்சேரி: புதுச்சேரியில் பதவி உயர்வை தவிர்த்து ஒரே இடத்தில் பணியில் இருப்போரை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாமல் இழுபறி நீடிக்கிறது. அரசு பணிகளில் தொய்வு உள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் போக்குவரத்து பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்படுவதால் நீண்டகாலமாக நடக்கும் பால பணிகளை ஆய்வு செய்தார்.
அதையடுத்து அனைத்து துறை தலைவர்கள், துறைச்செயலர்களை அழைத்து துறை பிரச்சினைகளை கேட்டறிந்தார். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துறைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருவதால் ஏற்படும் விஷயங்களை கேட்டறிந்தார்.
அதையடுத்து அதிகாரிகள், ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாறுதல் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பதவி உயர்வு வேண்டாம் என ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும். பிராந்திய அளவிலான இடமாற்றங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.