

அன்புமணி
சென்னை: திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளால் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 2022-23-ம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த 3 மாநிலங்களில் உத்தரப்பிர தேசம், ராஜஸ்தானை அடுத்து தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு ரூ.16,048 கோடியாகும்.
மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்குகின்றன. சிப்காட் உள்ளிட்ட 54 நிறுவனங்கள் 2022-23-ல் ஈட்டிய லாபம் ரூ.2,560 கோடி மட்டும்தான்.
அதேநேரம் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.