

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட் டனர்.
அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் அமர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றி வெளியேகொண்டு சென்றனர். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைதான நிலையில் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.