

"மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை" எனச் சொல்லி, திமுக கூட்டணிக்குள் மீண்டும் ஒரு அரசியல் குண்டை வீசியிருக்கிறார் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி.
திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி, ‘‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சரிவராது என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளனர். மற்ற மாநிலங்கள் கூட்டணியை ஏற்கும்போது தமிழகம் மட்டும் ஏன் ஏற்கக் கூடாது?’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; அதைச் செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், இந்த ஒரு திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது வெறும் மூடநம்பிக்கை.
கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநிலங்களில், 4 மாநில அரசுகள் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.