

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பி.ஆர்.பாண்டியன்.
தஞ்சாவூர்: கர்நாடகா செல்லும் தமிழக முதல்வர் விஜய், டெல்டாவில் வறண்டு கிடக்கும் பாசன பகுதிகளை பார்வையிட அந்த மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரை கையோடு அழைத்து வர வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: காவிரியில் தண்ணீர் வராததால், டெல்டாவில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக காட்சியளிக்கின்றன. தமிழகத்துக்கு 3,500 கன அடி வீதம் 15 தினங்களுக்கு காவிரியில் தண்ணீர் விடுவிக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கர்நாடகம் விடுவிக்கவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீரை திறக்க மறுத்தால், மத்திய அரசிடம் முறையிட்டு, தண்ணீரை திறக்கலாம் என காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் தெளிவாக உள்ளது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு உதவியுடன்கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மத்திய அரசிதழில் வெளியிட்ட பிறகு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும். முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு வரும் போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துள்ளோம் என அந்த மாநில முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால், கர்நாடகம் சென்று விட்டு, முதல்வர் விஜய் திரும்பும்போது, கர்நாடக முதல்வர் சிவகுமாரையும் கையோடு அழைத்து வந்து காவிரி டெல்டாவில் வறண்டு கிடக்கும் பாசன பகுதிகளை பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, எந்த சூழ்நிலையிலும் காவிரி குறித்துக் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்க மாட்டோம் என்றார்.