

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூன் 16) சில மாவட்டங்களில் மிதமான மழையும், தேனி மாவட்டத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 16), மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
17, 18 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், மதுரை, மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் 19 முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நாளை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும். 17 முதல் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 93 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 7 செமீ, கடலூர் மாவட்டம் வேப்பூர், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடியில் தலா 6 செமீ, காட்டுமயிலூர், குப்பநத்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்படி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.