

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த டிச.31-ம் தேதி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.248 கோடியே 66 லட்சத்து 17,959 ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து, தற்போது நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. கரும்பு கொள்முதல் பணியும் தொடங்கியுள்ளது. விரைவில் கரும்பும் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆகியவை சேர்த்து ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47,959 கோடி செலவில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் குடும்பங்களுக்கு அந்தந்த நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வநியோகத்தைத் தொடங்கினர். இப்பணியை இன்றைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை சென்னை ஆலந்தூர் பகுதிக்குட்பட்ட பட்ரோடு, நசரத்புரம் நியாயவிலைக் கடையில் நடைபெறும் விழாவில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர்மு.க.ஸ்டாலி்ன் தொடங்கி வைக்கிறார்.