

படங்கள்: எஸ்.சத்தியசீலன்.
சென்னை: பாடநூல்களை தாண்டி பொதுவான புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை” பதிப்பகம் சார்பில் சென்னை அடையார் டாக்டர் எம்ஜிஆர் - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 3 நாள் வாசிப்புத் திருவிழா மற்றும் புத்தக காட்சி நேற்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசியதாவது: தற்போது நிறைய பேர் வாசிப்பதே இல்லை.
நான் தினமும் தமிழ், ஆங்கிலம் என 12 பத்திரிகைகள் படிக்கிறேன். இவ்வளவு படித்தால்தான் எனக்கு ஒருநாள் திருப்தியான நாளாக இருக்கும்.
கல்லூரி மாணவர்கள் வகுப்பு முடிந்து மாலையில் தினமும் ஒரு மணி நேரம் படிக்கலாம். பத்திரிகைகளை படித்துப் படித்துதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது. படிக்கும்போதுதான் அதன் சுவையும், பெருமையும் நமக்கு தெரியும்.
மாணவர்கள் பாடப்புத்தகங்களை தாண்டி பொதுப் புத்தகங்களையும் படிக்க வேண்டும். புத்தக வாசிப்பு மிகவும் முக்கியம்.
ஆழ்ந்த வாசிப்புதான் மனிதனை மனிதனாக்கும். வாசிப்பினால் நல்ல பண்புகள் வளரும். வாசிப்பு கூர்ந்து நோக்கும் ஆற்றலையும், விசாலமான பார்வையையும் தரும். ஆழ்ந்த வாசிப்புடன் மனதில் பதிந்த கருத்துகள் மீது ஆய்வு நடத்த வேண்டும். அப்போது, வாசிப்பு ஆரோக்கியமான மனநிலையை தரும்.
அண்ணா, ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர் தொடர்பான புத்தகங்களை படித்தால் ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் வரலாற்று தலைவர்கள், தமிழக வரலாறு, பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நதி நீர் பிரச்சினை என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தினமும் நாளிதழ்களில் வெளியாகும் நடுப்பக்க கட்டுரைகளையும், தலையங்கங்களையும் அவசியம் படிக்க வேண்டும். வாசிப்பு என்பது ஆன்மாவுக்கு முக்கியம். வாசிப்பு தைரியத்தை கொடுக்கும். அது நம்மை ஒருமுகப்படுத்தும். வாசிப்பு ஒவ்வொருவருக்கும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில், “சிறு வயது முதல் புத்தக வாசிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் நான். எனது தந்தை நிறைய புத்தகங்கள் வாங்கி் கொடுப்பார்.
எங்கள் வீட்டிலேயே பெரிய நூலகம் இருந்தது. அதில் இருந்த என்சைக்ளோபீடியாவை படித்துதான் எனக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம் வந்தது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்துக்கு சென்றுவிடுவேன்.
மாலையில் நூலகம் மூடப்படும்வரை அங்கே உட்கார்ந்து புத்தகங்கள் வாசிப்பேன். அதேபோல் கிளை நூலகங்களுக்கு்ம் செல்வேன். புத்தகங்கள் படிக்க படிக்க எனது ஆங்கிலத்திறன் நன்கு வளர்ந்தது. பாடப்புத்தகங்களை தாண்டி பொதுவான புத்தகங்களையும்
வாசித்தால் பொது அறிவு வளரும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்க்க வேண்டுமானால் நூலகங்களுக்கு செல்ல வேண்டும். பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வி.தேவதாசன் வரவேற்றுப் பேசினார். தொடக்க விழாவில், தமிழ்த்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள், பேராசிரியைகள் கலந்துகொண்டனர். இந்த புத்தக காட்சி நாளை (புதன்கிழமை) முடிவடைகிறது.