

சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச்சம்பவங்கள் எல்லாம், தமிழகத்தில் தினசரி தொடர்கதையாவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வாக்குக் கேட்பதற்கான கருவியாக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் விஜய், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்னதான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யவேண்டும்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
அண்ணாமலை: கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி: ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
பாமக தலைவர் ராமதாஸ்: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்: என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழக காவல்துறை?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சட்டம் -ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதல்வர் விஜய்யும், அவருக்கு ஆதரவாககுரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப் போகிறார்கள்?
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கண்ணகி: பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகள் குறித்தோ, ஏமாற்று பேர்வழிகள் குறித்தோ அச்சமின்றிப் புகார் அளிக்க ஏதுவாக ரகசிய புகார் பெட்டிகள் அல்லது தனி உதவி எண்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பாட்டுக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.