

சூரியக் கட்சியின் ‘மாப்பிள்ளை சார்’ தென் பகுதியில் உள்ள ‘அல்வா’ மாவட்டத்தில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருவது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி வருகிறதாம்.
ஏற்கெனவே அந்த மண்டலத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘தலைவரின் மகள்’, யாரெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள் எனத் தெரிகிறதோ அவர்களை எல்லாம் களையெடுத்துவிட்டு புதியவர்களை பொறுப்புகளில் நியமிக்க சிபாரிசு செய்து வருகிறார். மாவட்டங்கள், நகரங்கள், ஒன்றியங்களைப் பிரித்தும் அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளித்து வருகிறார்.
வேட்பாளர் தேர்விலும் எவ்வித சஞ்சலத்துக்கும் இடம் கொடுக்காமல் தகுதியான நபர்களை டிக் அடித்து வைத்திருக்கிறாராம். இந்த நிலையில், ‘மாப்பிள்ளை சார்’ அங்கே முகாம் போடுவதால் புதுக் குழப்பம் பிறக்கிறதாம். யாரெல்லாம் ‘தலைவர் மகளால்’ ஒதுக்கப்பட்டார்களோ அவர்களெல்லாம் ‘மாப்பிள்ளை சார்’ எதிரே போய் பவ்யமாய் கைகட்டி நிற்கிறார்களாம்.
இவர்களில் சிலர் தங்களுக்கு தேர்தல் வாய்ப்புக் கேட்டும் சிபாரிசுக்கு ஆட்களைத் திரட்டிக்கொண்டு போய் பேசுகிறார்களாம். இதெல்லாமே, ‘தலைவர் மகளுக்கு’ விசுவாசமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை யோசிக்க வைக்கிறதாம்.