

‘மாளிகைக்’ கட்சியின் லாரி மாவட்டத்து முன்னாள் மாண்புமிகு ‘மணி’யானவருடன் அங்கிருக்கும் அதே கட்சியின் இரண்டு எக்ஸ் எம்எல்ஏ-க்கள் சரிக்கு சரியாய் மல்லுக்கு நிற்கிறார்களாம்.
அதில் ஒருவர், ‘மாணி’யானவர் மாண்புமிகு இருக்கையில் இருந்த போதே லாரி மாவட்ட தலைநகருக்குள் தன்னை மீறி எதுவும் நடக்காது என அதிரடி காட்டியவர். இன்னொருவர், ‘மணி’யானவர் கடந்த முறை சீட்டுக்கு தன்னை சிபாரிசு செய்யாததால் ஆத்திரப்பட்டு சுயமாக நின்று சொந்தக் கட்சிக்கே சூனியம் வைத்தவர்.
இதனால் இவர்கள் இருவரையும் இம்முறை எப்படியும் தேர்தல் திருவிழாவில் பரிவட்டம் கட்ட விடக்கூடாது என்பதில் பக்கா பிளானுடன் இருக்கிறாராம் ‘மணி’யானவர்.
ஆனால், தங்களுக்கு எடக்கானவரின் ஆசி அமோகமாய் இருப்பதால் ‘மணி’யானவரை லெஃப்ட்டில் டீல் பண்ணும் இந்த இரண்டு எக்ஸ்களும், தங்களது தொகுதிக்குள் வாரா வாரம் ஒன்றியம், நகரம் வாரியாக கடா விருந்து வைத்து, நாங்கள் தான் வேட்பாளர்கள் என்று சொல்லாமல் சொல்லி கட்சியினரை ‘கவனித்து’ வருகிறார்களாம். சுமார் மூவாயிரம் பேர் வரை ‘உண்டு களிக்கும்’ இந்த கடா விருந்து வைபவங்களுக்கு மறந்தும் கூட ‘மணி’யானவரை அழைப்பதில்லையாம்.