

விசில் நிர்வாகத்தில் முதன்மையானவருக்கு முக்கிய ஆலோசனைகளைச் சொல்லும் அண்டை மாநிலத்து ஆலோசகர்கள் இருவர் ‘மகிழ்ச்சி’ மற்றும் ‘மாப்பிள்ளை’ மாண்புமிகுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறதாம். பேரவைக் கூட்டம் முடிந்ததும் மந்திரிப் பிரதானிகள் சிலரை மாற்றிவிடும் யோசனையில் இருக்கிறாராம் விசில் தலைவர். அதற்காக மாண்புமிகுக்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடுகள் தயாராகி வருகிறதாம்.
ஆனால் அதிகார லாபியில் இருக்கும் அந்த நால்வரும், ‘அவைக்குள்’ தங்களது பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் அஞ்சாம்படை வேலைகளைச் செய்து ஆட்களைச் சாய்க்கும் வேலைகளைச் செய்து வருகிறார்களாம்.
ஏற்கெனவே, “எங்களை எல்லாம் கைவிட்டுட்டு இன்னிக்கு வந்தவங்கள எல்லாம் கூட்டி கூட வெச்சிக்கிறீங்க” என்று மன்றத்துப் பிள்ளைகள் குறைபட்டு வருவதால் ‘அவை’ மாற்றம் இருந்தால் அவர்களில் சிலரை உள்ளே இழுத்துப்போட மெனக்கிடுகிறாராம் ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு. அதற்கு மாற்றாக மற்ற மூவரும் தங்களின் அடிப்பொடிகளை உள்ளே கொண்டுவர தனித் தனி டிராக்கில் ஸ்கெட்ச் போடுகிறார்களாம்.
இப்போதிருக்கும் ‘அவையில்’ கிட்டத்தட்ட 17 பேர் ‘மகிழ்ச்சி’யின் சிபாரிசில் வந்தவர்களாம். எக்காரணம் கொண்டும் அந்த எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறாராம் அவர். இதனிடையே முதன்மையானவரின் ‘கழிப்பு’ ஆக் ஷனை அரசல் புரசலாக அறிந்தவர்கள், இந்த நேரத்தில் தங்களைப் பற்றி சோஷியல் மீடியாவில் ஏடாகூடமாக எதுவும் வந்துவிடக் கூடாதே என இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு இருக்கிறார்களாம்.