

‘மலைக் கோட்டை’ மாநகரில் சிறுபான்மையினர் பெருவாரியாக வசிக்கும் ‘ஈஸ்ட்’ தொகுதியில் கடந்த முறை சூரியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டார் அந்த ‘நல்லிணக்க’ தலைவர். ஆனால், எதிர்பார்த்தபடி அவரால் தனது தொகுதிக்கு எதையும் சாதித்துக் கொடுக்க முடியவில்லையாம்.
இதற்குக் காரணம், அங்கிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட சவுண்டான மாண்புமிகு ஒருவர்தானாம். இதனால் ஏகத்துக்கும் மன வருத்தப்பட்டுப் போன ‘நல்லிணக்க’ தலைவர், “கர்த்தருக்கு நன்றி... இம்முறை நான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை” என்று வெளிப்படையாகவே பேசி வந்தாராம்.
இதற்கு நடுவே, அவர் நடிகர் கட்சி பக்கம் ஓட்டம் நாட்டமாக இருப்பதாக சிலர் தலைமை வரைக்கும் தகவல்களை தட்டிவிட்டிருக்கிறார்கள். இவர் இப்படி இருப்பது தெரிந்ததும் இவரது தொகுதியை நமக்காக கேட்டு வாங்கிவிடலாம் என ‘மறுமலர்ச்சி’ கட்சி ஒரு கணக்குப் போட்டது.
இந்த நிலையில், அண்மையில் ‘நல்லிணக்க’ தலைவரை நயமாக அழைத்துப் பேசிய சூரியக் கட்சி தலைமை, “உங்கள் தொகுதியில் நீங்கள் தான் மீண்டும் போட்டியிடுகிறீர்கள்” என்று அன்புக் கட்டளை போட்டு அனுப்பி இருக்கிறதாம்.