

தேவகோட்டை: தேவகோட்டையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாக 2 ஆய்வாளர்கள் உட்பட 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், மே 19-ம் தேதி ஆட்டோவில் சென்றார். அப்போது ஓட்டுநர் மாதவன் (48) என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அந்தப் பெண் தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார்.
ஆனால், புகாரை வாங்க மறுத்த போலீஸார் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் செல்லும்படி திருப்பி அனுப்பினர். இதையடுத்து, மகளிர் காவல் நிலையம் சென்ற அப்பெண்ணை அங்கிருந்த போலீஸார் மீண்டும் நகர் காவல் நிலையத்துக்கே அனுப்பினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர், தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரியிடம் புகார் தெரிவித்தனர். ஐஜி உத்தரவின்பேரில், தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து காரைக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவனை கைது செய்தனர்.
மேலும், புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை அலைக்கழித்ததாக தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் துரைராஜ், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சீதாலெட்சுமி, சிறப்பு சார்பு- ஆய்வாளர்கள் ஜெயா, ராஜேஸ்வரி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் சொல்லாமல் மறைத்த தனிப்பிரிவு காவலர் சந்தானம் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து ஐஜி உத்தரவிட்டார்.