

மதுரை: மானாமதுரையில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் உடல், 100 நாட்களுக்குப் பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அரசு சார்பில் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில், போலீஸாருக்கும் ஆகாஷின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரையைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன் மகன் ஆகாஷ் டெலிசன் (24). அப்பகுதியைச் சேர்ந்த 2 பேரை வெட்டிய வழக்கில், போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர், அவரை போலீஸார் தாக்கியதில், அவரது கால் எலும்பு முறிந்ததாகக் கூறி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த மார்ச் 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின்படி உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய போலீஸாரை கைதுசெய்ய வேண்டும், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், அப்போதுதான் ஆகாஷ் உடலை பெற்றுக் கொள்வோம் என அவரது உறவினர்கள் பல கட்டப் போராட்டம் நடத்தினர். இதனால், 100 நாட்களாக ஆகாஷ் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆகாஷ் குடும்பத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அவரது உடலை பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, ஜூன் 15-ம் தேதிக்குள் அவரின் குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால், அரசு சார்பில் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி, ஆகாஷ் உடலை ஆர்டிஓ கருணாகரனிடம், மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் ஆகாஷின் உடல் தகனம் செய்வதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கிருந்த உறவினர்கள், உடலை வெளியே கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்த சுமார் 50 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், ஆகாஷின் உறவினர்கள் முன்னிலையில், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் ஆகாஷின் உடல் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது.