

கோப்புப் படம்
சென்னை: போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொடக்கத்தில் ரயில்கள் மூலம் மட்டுமே கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது ஆம்னி பேருந்துகளிலும் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இதுபோன்ற கடத்தல்களை முற்றிலும் தடுத்து நிறுத்தவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களின் ஆம்னி பேருந்து நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘விதிகளை மீறி போதைப்பொருள் கடத்தலுக்குத் துணை போகும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த நடவடிக்கை தொடரும்’ என்றனர்.