

சீமான்
மதுரை: அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி, தனியார் யூடியூப் சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்டியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலினிடம் ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழன் கோகுல் தனது முகநூல் பக்கத்தில் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, சீமான் மீது தனிநபர் தாக்குதலை செய்கிறார்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சீமான் மீது அவதூறு பரப்பிய பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி விசாரித்தார். பின்னர் நீதிபதி, தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். சீமான் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர். முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக திமுக எம்எல்ஏவை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். ஆனால், சீமானை அவதூறாகப் பேசியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
மனுதாரர் தரப்பில், பழநி கோயில் நிலப் பதிவு தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் குறித்து வீடியோ வெளியிட்டநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சீமானை அவதூறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. மதுரை சைபர் கிரைம் போலீஸார், சீமான் தொடர்பான மார்ஃபிங் புகைப்படங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நாளைக்கு (இன்றைக்கு) தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.