

மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்.
மதுரை: மதுரையில் மார்ச் 1-ல் எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். மேலும், தேஜ கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
தேஜ கூட்டணி 2-வது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுரை மண்டேலா நகரில் வரும் மார்ச் 1-ம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் தோப்பூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது.
எய்ம்ஸ் தொடக்க விழாவுக்கு மதுரை விமான நிலையம் அருகே முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், பிரதமர் பங்கேற்கும் அரசு விழா மற்றும் அரசியல் விழாவை வெவ்வேறு இடங்களில் நடத்துவதால் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படும் என்பதால், இரு விழாவையும் ஒரே இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை ஒரே இடத்தில் நடைபெறுகின்றன.
இந்த விழாக்களுக்காக மண்டேலா நகரில் ஒரே இடத்தில் இரு மேடைகள் அமைக்கப்படுகின்றன. முதலில் அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்துவைப்பதுடன், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
மேடை அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமரும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. பின்னர், தேஜ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணியை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “தற்போது விழா நடைபெறும் இடத்தில்தான் 2019-ல் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவும், அதிமுக-பாஜக கூட்டணி பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இரு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது நடைபெறும் எய்ம்ஸ் திறப்பு விழா மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்” என்றனர்.