

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல்.
புதுக்கோட்டை: தமிழகத்தில் இந்த முறை திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் என்.ராமச்சந்திரனை ஆதரித்து, பாஜக மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியது: திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழலால் தமிழகம் சீர்கெட்டுவிட்டது.
சனாதனத்துக்கு எதிராகபேசி தமிழக மக்களை புண்படுத்திவரும் உதயநிதி ஸ்டாலினை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் 5 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாததால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இளைஞர்கள் போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, உறவினர் சபரீசன் ஆகியோர் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டுள்ளனர். தமிழக மக்கள் இந்த முறை திமுக கூட்டணியை புறக்கணிப்பார்கள். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக அமர்த்துவார்கள்.
தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும், அதை ஏற்காததால் கல்விக்கான தொகையை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது என்றும் ரூ.10 ஆயிரம் கோடியை கொடுத்தாலும் இந்தியை ஏற்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் எந்த இடத்திலும் இந்த மொழியைத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. இக்கல்வி கொள்கை குறித்து தமிழக முதல்வர் தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏன் தமிழ் மொழி கற்பிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் தமிழை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.