

கோப்புப்படம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள போலீஸாரை திரும்ப பெறக் கோரிய வழக்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி நான் தொடர்ந்த வழக்கில், தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. பின்னர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் நிலையில் நள்ளிரவில் போலீஸார் பாதுகாப்புடன் 30 பேர் சந்தனக்கூடு விழா கொடியுடன் மலை உச்சிக்கு சென்று தர்காவின் முன் அந்த கொடியை ஊன்றியுள்ளனர். மேலும், முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள புனிதமான கல்லாத்தி மரத்தில் தர்கா கொடியை கட்டியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் வழக்கின் பிரதான மனு மீது பிறப்பிக்கப்பட்ட தீபம் ஏற்றும் உத்தரவை நிறைவேற்றும் வரை விழா நடத்தவும், ஊர்வலம் நடத்தவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் மேற்பார்வைப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களை உடனடியாக திரும்பப் பெற மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையில் போலீஸார் இருக்கவே கூடாது என்பதுபோல் மனுதாரரின் கோரிக்கை உள்ளது. அது ஏற்கத்தக்கதல்ல என்றார். அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், இதுவரை இதுபோன்று புகார் எழுந்தது இல்லை என்றார்.
அதற்கு நீதிபதி, ஏற்கெனவே இது போன்ற வழக்கில் கொடிமரத்தில் கொடி ஏற்றக் கூடாது என நீதிபதி இளங்கோவன் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிகிறது. அதை மீறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே? எனக் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், தற்போது புதிதாக எங்கும் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மனு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.