

சென்னை: ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்’ என்று மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைப்போல சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், மாற்றுத் திறனாளி முன்னேற்றக்கழகம் என்ற கட்சி மதுரையில் மார்ச் 15-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம், இக்கட்சியின் தலைவர் ஆர்.சாமுவேல்ராஜ், பொதுச்செயலாளர் சகாயராஜ் ஆகியோர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், இளம் விதவைகள் மற்றும் கைம்பெண்கள், நிலமற்ற ஏழை, விவசாய தொழிலாளர்கள் போன்ற சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாத விளிம்பு நிலை மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலனைக் காக்கவும், அவர்கள் வாழ்வில் ஏற்றத்தைக் காணவும் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம்,சட்டப்பேரவையில் எங்கள் உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கீடு உள்ளது.
ஆனால், இந்தியாவில் 3 முதல் 4 கோடி வரை வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு இல்லை. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பார்வையற்றோருக்கு 2 தொகுதிகள் உள்பட 6 தொகுதிகள் எங்கள் பிரிவுக்கு ஒதுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 சதவீதம் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு அரசு,தனியார் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் நியமனம் செய்யப்பட்ட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை 2016-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, அரசுகள் செயல்படுவதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.