

சென்னை: தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் மற்றும் சிஐடியு பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே தினத்தையொட்டி ஆண்டுதோறும் தொழிற்சங்கங்கள் சார்பில் காலையில் கொடியேற்றுதல், மே தினப் பூங்காவில் அஞ்சலி செலுத்துதல் மற்றும் மாலையில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வாக்குப்பதிவு முடிந்துவிட்ட போதிலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு முன்னும், பின்னும் பல மதங்களின் திருவிழாக்கள், சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களை மட்டும் அரசியல் கட்சிகளைப் போல அதிகாரிகள் கருதுவது கவலை அளிக்கிறது.
பிரச்சாரமாக பார்க்கக் கூடாது: தேர்தல் காரணங்களுக்காக கொடிமரங்கள் எல்லாம் அகற்றப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்துவிட்ட சூழலில் மே தின கொண்டாட்டங்களை ஒரு பிரச்சாரமாக பார்க்கத் தேவையில்லை. எனவே, தொழிலாளர்கள் தங்களது உரிமையை நிலைநாட்டு வகையில், மே 1-ம் தேதி கொடிமரங்களை நடவும், கொடியேற்றவும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தொழிற்சங்கங்கள் எவ்வித தடையுமின்றி நடத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.