

கோவை: “ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை, சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காமராஜர் பள்ளியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசுகையில், “2026 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. பெண்களும், இளைஞர்களும் அதிகளவு வாக்களித்து வருகின்றனர். தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் திமுக இன்று காலை வரை தங்க நாணயம், வெள்ளி நாணயம் என டிராமா செய்கிறார்.
ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி 6 மாத காலமாக போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணை தூவி அராஜாகம் நடந்து கொண்டு இருக்கின்றது. தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எழுப்பி கோல்ட் காயின், சில்வர் காயின் என ஏமாற்றி வருகின்றனர்.
கோவை மாநகராட்சியில் இதே மாதிரி டிராமா செய்தார்கள். இப்போது குப்பை கூட எடுக்க வருவதில்லை. ஆட்சி மாற்றம் நிச்சயமாக வேண்டும். மக்கள் இதை செய்வார்கள்.
இளைஞர் சக்தியால் எதுவும் முடியும். இன்ஸ்ட்டா, சமூக ஊடகத்தில் இருப்பது அல்ல அரசியல். 2 மணி நேர சினிமா என்பது வேறு; அரசியல் வேறு. இன்ஸ்டா என்பது ஒரு டூல். முடிவெடுப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும். நிறைய இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது” என்று அவர் கூறினார்.