

பானுமதி (அதிமுக), சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக)
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, தமிழக அரசியலில் கவனம் ஈர்க்கும் முக்கியக் களமாக மாறி வருகிறது. இங்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக, நாதக ஆகியவை வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.
அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இதன் மூலம் மீண்டும் அவர் இத்தொகுதியில் தவெக வேட்பாளராக களம் காண்கிறார்.
திமுக சார்பில் வழக்கறிஞர் அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் சுகன்யாவும், அதிமுக சார்பில் புறநகர்மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ள பானுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் சார்பில் கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் கட்சி அலுவலகங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. நாள்தோறும் காலை முதல் இரவு வரை அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை போலவே தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன், கடந்த கால பலம் மற்றும் பலவீனங்களை அலசி ஆராய்ந்து பூத் கமிட்டி அளவிலான நிர்வாகிகளைத் தட்டி எழுப்பும் பணியில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது.
திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், தாராபுரத்தில் தனது செல்வாக்கைத் தக்க
வைக்க முன்னாள் அமைசசர்கள் மற்றும் உள்ளூர் தி.மு.க பிரமுகர்கள் மூலம் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தாராபுரத்தில் தங்களது பலத்தை நிரூபிக்க களம் கண்டுள்ள தவெகவினர், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலும், சமூக வலைதளங்களை தொடர் வோரின் வாக்குகளை கைப்பற்றும் நோக்கிலும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
‘ரீல்ஸ்’ பிரச்சாரம் மூலம் தவெக ஆட்சியைப் பிடித்ததாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு போட்டியாக திமுகவும், அதிமுகவும் ‘ரீல்ஸ்’ பிரச்சாரத்தில் இறங்க தயாராகி வருகின்றன.
வீடு வீடாக, வீதி வீதியாக செல்வதை விட, ரீல்ஸ் மூலம் தங்கள் கருத்துகள் ஒவ்வொரு வாக்காளரையும் செல்போன் மூலம் சென்றடைவதால் இதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
வாட்ஸ்அப் குழுக்கள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்கள் மூலமாக எதிரணி வேட்பாளர்களை விமர்சிப்பதும், தங்களது வேட்பாளர்களின் சிறப்புகளை முன்னிறுத்துவதும் என டிஜிட்டல் தளத்திலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.