

சென்னை: ‘வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் இருந்து வீட்டு சிலையில் திமுக அரசு வைத்துள்ளது.
சுமுகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாமல், இப்படி சட்டத்துக்கு புறம்பான வகையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அவர்களின் செல்போனைப் பறிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும்.
அறவழியில் போராடியதற்காக, ஆசிரியர்களைக் கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.