

சென்னை: ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஜனநாயகத்தில் மக்கள்தான் நீதிபதிகள். மக்களுக்காக தான் ஆட்சி. மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து, ஜனநாயக கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்ற பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி.நட்டா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோருக்கும், கூட்டணி வெற்றிக்கு உழைத்த நயினார் நாகேந்திரன் (பாஜக), அன்புமணி (பாமக), டிடிவி தினகரன் (அமமுக), ஜி.கே.வாசன் (தமாகா) உள்ளிட்ட கூட்டணி கட்சிக் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டும் வருவோம். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன், ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்.
“எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் அதிமுக மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.