

சென்னை: பைக் விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழந்த நிலையில் நண்பர்கள் இருவர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார் (23). சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி சாலையோர பகோடா கடையில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த லலித் குமார் (21), சஞ்சய் (24) ஆகிய இருவரும் முகப்பேர் பகுதியில் சாலையோர வடை கடையில் வேலை செய்து வருகின்றனர். நண்பர்களான 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரே பைக்கில் முகப்பேரிலிருந்து போரூர் டோல்கேட் நோக்கி வேகமாக சென்றனர்.
தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்ற போது, பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிதீஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லலித் குமார் மற்றும் சஞ்சய் காயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், நிதீஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த 2 பேரையும் மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நண்பர்கள் 3 பேரும் ஹெல்மெட் அணியாமல் ஒரே பைக்கில் சென்றதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.