

கோப்புப் படம்
சிவகங்கை: “தொகுதி மறுவரையறை அரசியல் சாசன திருத்த மசோதாவில் பேராபத்து உள்ளது” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தொகுதி மறுவரையறை அரசியல் சாசன திருத்த மசோதாவில் பேராபத்து உள்ளது. அது நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்ததை வரவேற்கிறேன்.
அரசியல் சாசனத்தை திருத்த முற்பட்டதை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முறியடித்துள்ளது. இதன்மூலம், அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது. அதை தடுத்த எம்.பி.க்களுக்கு எனது பாராட்டுகள்.
இந்த அரசியல் சாசன திருத்தச் சட்டம் மட்டும் நிறைவேறியிருந்தால், தொடர்ந்து அரசியல் சாசனத்தைத் திருத்தி இருப்பர். சிறுபான்மையினர் உரிமைகளை பறித்திருப்பர். தாங்கள் நினைத்தபடி, முஸ்லிம்கள் வக்ஃபு சட்டம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான எப்சிஆர்ஏ திருத்தச் சட்டத்தை செயல்படுத்தி இருப்பர். பேச்சுரிமை, எழுத்துரிமையை குறைத்திருப்பர்.
தொகுதி மறுவரையறை அரசியல் சாசன திருத்தச் சட்ட மசோதா விவகாரத்தில் அரசுக்குத் தோல்வி என்று சொல்லமாட்டேன். அது அரசின் துணிச்சலான முயற்சிக்கு கிடைத்த உண்மையான தோல்வி” என்று அவர் கூறினார்.