

சென்னை: கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியைத் தடுக்க கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருச்செந்தூர், திருவண்ணாமலை, சமயபுரம், பழநி உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறி பக்தர்களிடம் சிலர் பணம் பறித்து மோசடியில் ஈடுபடுவதாக அறநிலையத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தைத் தடுக்கவும், கூட்ட நெரிசலை முறைப்படுத்தவும் முக்கியக் கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மற்றும் நேர ஒதுக்கீட்டு முறையை விரைவில் அறிமுகம் செய்ய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விவாதித்தார்.
இந்நிலையில் தற்போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், பக்தர்கள் தங்களின் செல்போன் அல்லது கணினி வாயிலாக, தாங்கள் வர விரும்பும் தேதி மற்றும் உகந்த நேரத்தை முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளலாம்.
இனிவரும் காலங்களில், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட இந்த இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியத் திருவிழாக் காலங்களுக்கும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்பட உள்ளது.