

செல்வராஜ்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், துரை.சந்திரசேகரன் மற்றும் கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த, தஞ்சாவூர் கூட்டுறவு வங்கியின் கள மேலாளரான பட்டீஸ்வரம் செல்வராஜ்(51) மதுபோதையில் தள்ளாடியபடி கைகளை தட்டி கூச்சலிட்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை அங்கிருந்து வெளியே போகும்படி கூறியும், அவர் அங்கிருந்து செல்லவில்லை.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவரை அங்கிருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து தள்ளாடியபடி வெளியேறினார்.
இந்த சம்பவத்தால் விழாவில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது. இந்தசம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் வெ.பெரியசாமி விசாரணை நடத்தி, செல்வராஜை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.