

சென்னை: கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடும் நாட்கள், விழாக் காலங்களில் பொறுப்பின்றி குப்பையை வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலுக்கு அடுத்த நாள், சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் குப்பை அதிக அளவில் கிடப்பதாக இணைய இதழ் ஒன்றில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடற்கரை மண்டலங்கள், கடற்கரைப் பகுதிகள், ஆறுகள், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026ஐ ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு, எதிர்பார்க்கப்படும் கூட்டத்துக்கு ஏற்ப போதுமான பணியாளர்கள், கழிவு சேகரிப்பு முறைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்து, நிகழ்வுக்கு முன்னதாகவே ஒரு ‘சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை’ (Pre-Event Environmental Management Plan) தயாரித்து செயல்படுத்த வேண்டும்.
பொறுப்பின்றி குப்பையை வெளியே வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். கடற்கரை சூழலியலைப் பாதுகாக்க, குறிப்பாக கடல் ஆமைகள் முட்டையிடும் காலமான ஜனவரி முதல் மே மாதம் வரை, அவை முட்டையிடும் பகுதிகளை அடையாளம் கண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விழாக் காலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் காலங்களில், கடலோரப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026ஐ கட்டாயம் கடைபிடிக்க அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட வேண்டும். அந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்பு கடைகளை உள்ளாட்சி அமைப்புகள் ஒழுங்குபடுத்த வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.