

மதுரை: நேபாளத்தில் சிக்கிய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 37 பேரை மீட்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கும்பகோணத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் மூலம், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர், கடந்த ஆக.23-ல் நேபாளம் சென்றனர். அவர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கினர். இந்தக் குழுவில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் உள்ளார்.
எனவே, நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை, இந்திய தூதரகம், தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, மீட்பு பணிகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதே எனக் கேள்வி எழுப்பி விசாரணையை செப்.10-க்கு தள்ளி வைத்தது.