

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது. சுமார் 2 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 22.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - ‘நீட்’) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி (நாளை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறும். துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
இந்நிலையில், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தேர்வர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம்.
அவை வெளிப்படைத் தன்மையுடன் அதாவது ஒளிபுகும் விதமாக இருக்க வேண்டும். மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்கள், பொருட்களை அணிந்து வரலாம். அதேபோல, சாதாரண ஆடைகளை அணிவதே சரியானது.
தேவைப்பட்டால் முழுக்கை ஆடைகள் அல்லது கம்பளி ஆடை அணிய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்துவிடவேண்டும்.
உயரம் குறைந்த (லோ ஹீல்ஸ்), சாதாரண காலணிகளை அணியலாம். உயரமான காலணிகள், கனமான அணிகலன்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். தேர்வர்கள் காலை 11 முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்குப் பிறகு வந்தால் அனுமதி இல்லை.
தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வந்தடையும் வகையில் பயணத்தை திட்டமிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
மனநல ஆலோசனை
இதற்கிடையே, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீட் தேர்வு 3-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலம் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
டெலி கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.