

நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: பள்ளிக் குழந்தைகளை பணியாட்கள் போல பயன்படுத்துவதாக, தவெக நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “காஞ்சிபுரம் அருகே ஜேஜே நகர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, மாணவர்களை பள்ளி சீருடையிலேயே உங்கள் (முதல்வர்) பிறந்தநாள் விழாவுக்கு அழைத்துச் செல்லும் தைரியமும், துணிச்சலும் தவெக நிர்வாகிகளுக்கு எப்படி வந்தது?
முதல்வர் பிறந்தநாள் என்று கூறிக் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களை தவெக கட்சிக் கொடிகள் கட்ட வைப்பது, அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை முதல்வர் விஜய்க்கு “ஹாப்பி பார்த்டே” பாட வைப்பது, அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களை “விஜய் வாழ்க” என கோஷமிட வைப்பது என படிக்கும் பிள்ளைகளை பணியாட்கள் போல நடத்துவதற்கு தவெகவினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
எங்கள் வீட்டுப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளைக் கொண்டாட வைக்குமளவுக்கு, அவர் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகியா?
கடந்த தேர்தலின் போது சட்டத்துக்கு புறம்பாக சிறுவயது குழந்தைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அரியணையில் அமர்ந்த நீங்கள், தற்போது அதே குழந்தைகளை பணியாட்கள் போல பயன்படுத்துவதை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்களை உங்கள் பிறந்தநாள் விழாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் மீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடக் கூடாது என்பதை உங்கள் கட்சியினருக்கு புரியும் மொழியில் நீங்கள் வலியுறுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.