

நயினார் நாகேந்திரன்
சென்னை: “சபாநாயகர் என்பவர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என முழக்கமிடும் மதவாத ஊர்வலத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றது அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் குலைக்கும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “உச்ச நீதிமன்றமே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும், தனது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியமானது என்பதையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், ‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பங்கேற்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுவதற்குச் சமமாகும்.
சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராகவும், சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே சட்டப்பேரவையில் பைபிள் வசனங்களைப் போதித்து, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கடும் விமர்சனத்துக்குள்ளான ஜே.சி.டி பிரபாகர், தற்போது மீண்டும் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பைக் குலைப்பதாக உள்ளது. சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா?
மத அடையாளத்துக்காகப் பெண்களின் உரிமைகளுடன் விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நவீன சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
நாட்டின் சட்டத்தை விடத் தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சபாநாயகரின் செயல், தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனை மற்றும் சமூக நீதிப் பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவாலாகும். சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியவை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.