

புதுக்கோட்டை: திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதவே அமித் ஷா தமிழகம் வந்துள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது: பிரச்சாரப் பயணத்தின்போது, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் கோயிலில் வணங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். திமுக ஆட்சியில் எப்போதும் மக்களுக்கு பயம்தான் உள்ளது. எனவே, திமுக ஆட்சியை அகற்றுவதற்கு அனைவரும் விரதம் இருந்து, அல்லும் பகலும் பாடுபட வேண்டும்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு செந்தில் பாலாஜிதான் காரணம். திமுக ஒருபோதும் மக்கள் சக்தியுடன் ஆட்சியைப் பிடித்தது இல்லை. திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதவே அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும் போது, “நாட்டிலேயே காவல் துறையினருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாகதமிழகம் விளங்குகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 5 சதவீதம்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி இருந்தால் திமுகவினால் எப்படி மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்? போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. திமுக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் என்ன வகையானது என யாருக்கும் புரியவில்லை” என்றார்.