

சென்னை: அரசு காப்பகங்களில் பெண் குழந்தைகள் தொடர்ந்து மாயமாகி வரும் நிலையில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்டமாவட்டங்களில் உள்ள அரசுகாப்பகங்களில் உள்ள சிறுமிகள் தொடர்ந்து மாயமாகி வருவதாகவும், தப்பியோடுவதாகவும் வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆண்டுதோறும் போக்சோ வழக்குகள் பெருகிவரும் நிலையில், அரசு காப்பகங்களில் இருந்து காணாமல்போன குழந்தைகள் பாலியல் தொழில்களுக்காகக் கடத்தப்பட்டனரா, இதில் காப்பகக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா, அல்லது காப்பகத்தின் கொடுமை தாங்காமல் குழந்தைகள் ஓடிவிட்டனரா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இவ்விவகாரத்தை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். தமிழகப் பிள்ளைகள் அனைவரும் தன்னை ‘அப்பா’என்றழைக்க வேண்டும் என ஆசைப்படும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் அப்பாவி குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க காப்பகங்களில் ஆய்வு செய்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.