இளம்பெண்ணுக்கு தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார், அண்ணாமலை கண்டனம்

இளம்பெண்ணுக்கு தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார், அண்ணாமலை கண்டனம்
Updated on
1 min read

சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணை தவெக நிர்வாகிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்திற்கு எதிராக தமிழக பாஜக முன்னாள், இன்னாள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்: ”தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளி வந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர்.

இந்த லட்சணத்தில், முதல்வர் விஜய் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்! அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும்!” என்று நயினார் கூறியுள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்: "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி ஜெயபால் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இளம்பெண்ணுக்கு தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார், அண்ணாமலை கண்டனம்
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மறுசீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in