

சென்னை: தமிழகம் முழுவதும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் 50-க்கும் மேற்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்களை ரத்து செய்து நகராட்சி நிர்வாகத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உரிய விதிகளின் படி செயல்படுத்தப்படவில்லை என அவற்றை தவெக அரசு ரத்து செய்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறையை தனது வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளில் வெளியிடப்பட்டிருந்த குறுகிய கால ஒப்பந்தங்களை உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் நகராட்சி நிர்வாகத் துறை தற்போது ரத்து செய்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இந்த விவகாரங்களில் ஒப்பந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அதை சமர்ப்பிப்பதற்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே அவகாசம் தரப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளில் வெளியிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உடுமலைப்பேட்டையில் 30 குறுகிய கால டெண்டர்களும், கோத்தகிரி 3, செங்கதத்தில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மணப்பாறை, பெரம்பலூர்,திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளிலும் 20-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த டெண்டர்கள் கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு வழங்குதல், வாரச்சந்தை கடைகள் பராமரிப்பு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு நகராட்சி பணிகளை மேற்கொள்வதற்காக வெளியிடப்பட்டிருந்தன. தொடர்ந்து உரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி, தேவையான கால அவகாசத்துடன் புதிய ஒப்பந்தங்கள் வெளியிடப்படும் என்று துறைஅதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் உரிய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றி, தேவையான கால அவகாசத்துடன் புதிய டெண்டர்களை நகராட்சி நிர்வாகத் துறை வெளியிடப்படுமா என்பது குறித்து ஒப்பந்ததாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.