

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
சென்னை: ”காங்கிரஸ் கட்சிக்கு ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இரு புறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும்போது ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன்.
இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக தவெகவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது.
அரசியலில் கூட்டணிகள் சேர்வதும், பிரிவதும் இயல்பானதுதான். திமுக கூட 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம்.
இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில், அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினே தோல்வியடைந்திருக்கிற நிலையில் ,நேற்று வரை கூட்டணியில் இருந்துவிட்டு அது குறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல.
காங்கிரஸ் கட்சியும் தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது.
அதேபோல ராகுல் காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் பாஜகவின் பாசிச ஆட்சியை ஆட்சியை சமரசமற்று எதிர்த்து வீழ்த்தக் கூடிய வல்லமை உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்பதை நாடறியும். அவரை அவதூறு செய்வது யாராக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கவோ பார்த்துக் கொண்டிருக்கவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அரசியலில் ஏற்கெனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன்னகர்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.