

சென்னை: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. இது தமிழகப் பகுதிகளிலும் பரவி வரும் நிலையில், சென்னை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் நேற்று தொடங்கியது. மேலும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நேற்று (ஜூன் 4) முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை முதல் ஜூன் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று (ஜூன் 5), கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.