

சென்னை / திருச்சி: முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டப்பேரவை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழக மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருச்சியில் நேற்று தனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக எனது பெயர் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வந்தனர்.
அதன்படி அவர்கள் சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்தேன். அலுவலகம் சார்ந்த கோப்பு ஒன்றை மட்டும் நகல் எடுத்துக் கொண்டு, என்னிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு சோதனையை முடித்துவிட்டு சென்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் சென்று நிரபராதி என நிரூபிப்பேன். எனது வீட்டிலும், என்னைச் சார்ந்தவர்கள் வீட்டிலும் தற்போது 3-வது முறையாக சோதனை நடத்துள்ளது.
ஆளுங்கட்சி குறித்து சட்டபேரவையில் அடிக்கடி கேள்வி கேட்பதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடத்திருக்கலாம். இந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சட்டப்பேரவையில் சுட்டிகாட்டுகிறோம். காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.