

அமைச்சர் வன்னி அரசு
சென்னை: “மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும்,” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், “சாதியத்தை வேரறுப்போம்; தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம்” என்று எங்களுடைய எழுச்சித்தமிழர் திருமாவளவன் முழங்கினார்; அந்த வரிசையில், “சேரி இல்லா ஊருக்குள்ள, பொறக்க வேணும் பேர புள்ள” என்ற கவிஞர் கபிலன் வரியில் நம்முடைய முதல்வர் விஜய் பாடிய பாடலையும் சாதி ஒழிப்பு களத்திலே சேர்த்துக்கொள்கிறேன். மானியக் கோரிக்கையைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, மானியக் கோரிக்கையைப் படிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.
1999-ம் ஆண்டுக்கு முன்பு வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் புறக்கணிப்புப் பாதையில் செயல்பட்டோம். நாங்களெல்லாம் சட்டப்பேரவையில் வந்து அமர்வோமா என்று தெரியாமல் இருந்தோம்.
மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும். தமிழகம் முழுவதும் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்க இருக்கிறோம்.” என்றார்.
பின்னர், “என் வெற்றிக்கு காரணமான திமுகவினர் அனைவரின் பெயரையும் நான் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன். ஆனால், அந்த பக்கம் பேசும் திமுகவினர் யாரும் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிப்பது இல்லை. எனவே நாங்கள் நன்றிக்குறியவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்,” க்என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
இதற்கு, “எங்கள் தலைவருக்கும், திருமாவளவனுக்கும் இருந்தது தேர்தல் கூட்டணி கிடையாது, கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன். அவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதிலளித்தார்.