

கோப்புப் படம்
சென்னை: பள்ளிக் குழந்தைகளை அதிக அளவில் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறையினருக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக போக்குவரத்துத் துறை இயக்குநருடன், அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பள்ளிக் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து போக்குவரத்துத் துறையினருக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அதன்படி ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமான அளவில் பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் இத்தகைய வாகனங்களின் இருபுறமும் முறையானபாதுகாப்பு தடுப்புக் கதவுகள் இருப்பதையும், அவசர கால பயன்பாட்டுக்கான முதலுதவி பெட்டி பராமரிக்கப்படுவதையும், அவசர கால காவல் துறை உதவி எண்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் போக்குவரத்துத் துறையினர் உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.