

அமைச்சர் ரமேஷ்
சென்னை: “அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்” என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் முறையிலேயே நடைபெறும். கோயில்களின் கார் பார்க்கிங் வசதிகளில் இனி டிஜிட்டல் முறையில் பில் வழங்கப்படும்.
பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு பொதுவான டெண்டர் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி, பான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் டெண்டர் முறை முன்னெடுக்கப்படுகிறது. டெண்டர் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான உறுதிமொழி படிவங்கள் தமிழ், ஆங்கிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பழநி விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என முதல்வரிடம் கூறினேன்; அவரும் அதை சிபிசிஐடிக்கு மாற்றினார். தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஐடி விங்கில் உள்ளவர்கள், என் மீது பொய் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
என் குடும்பத்தில் யாருக்குமே 2 கோடி ரூபாய் பணம் கிடையாது. நாங்களே வாடகை வீட்டில் வசிக்கிறோம். அவர்கள் எனது பெயர், புகழை கெடுக்க இப்படி செய்கின்றனர். பழநி விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.