

அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: கோடை வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை பெற்று, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியது: “கோடை வெயில் அதிகமாக தகித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வருடன் கலந்துபேசி, பள்ளிகள் திறப்பு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு பயனுள்ள எந்த திட்டங்களும் நிறுத்தப்படாது. அந்த வகையில், காலை உணவுத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை இன்னும் மேம்படுத்தி சத்தான உணவுகள் வழங்க திட்டமிட்டு வருகிறோம்.
இப்போது உள்ள நடைமுறையில் மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த உணவுப் பட்டியலில் மாற்றம் வேண்டும் என கோரிக்கைகள் வரும் நிலையில், அதுகுறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம். அதேபோல, காலை உணவு தரமாக வழங்கப்படாத நிலை இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறையில் பணம் கொடுத்தும், பரிந்துரை செய்தும் பணிகள் நிறைவேறிய காலம் முடிந்துவிட்டது. இனி இந்த துறை நேர்மையாக செயல்படும். தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தை பொருத்தவரை, இருமொழிக் கொள்கைதான் எங்கள் டிஎன்ஏ. எத்தனை முறை கேட்டாலும் இதில் எந்த மாற்றமும் கிடையாது. தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.