

திருவிடைமருதூர்: “அன்புமணி தினந்தோறும் ஏதாவது ஒரு துறையை எடுத்து, அது சம்பந்தப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவ்வப்போது அதற்கான விளக்கங்களை நாங்கள் வழங்கி வருகிறோம்” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம், செம்பியவரம்பல், தோப்புத்தெருவில் ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உயர் கல்வித் துறை அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏவுமான கோவி.செழியன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் சில இடங்களில் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு காலதாமதமாகிறது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட செம்பியவரம்பல், தோப்புத்தெருவில்,ரூ.3 கோடி மதிப்பில் சுமார் 7 ஏக்கரில் சிறு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே விளையாட்டு துறையின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது.
குக்கிராமத்தில் உள்ளவர்களும் உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறவேண்டும் என்ற உந்து சக்தியை விதையாக விதைத்த பெருமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கே சாரும்.
படித்து பட்டம் பெற்று, அனைத்து விஷங்களையும் தெரிந்த அரசியல் தலைவராக கருதப்படுகின்ற அன்புமணி, தொடர்ந்து திமுக அரசை குறை கூறி, குற்றம்சாட்டி வருகிறார். தினந்தோறும் ஏதாவது ஒரு துறை எடுத்து, அதன் சம்பந்தப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவ்வப்போது அதற்கான விளக்கங்களை நாங்கள் வழங்கி வருகிறோம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களில் நிரப்புவதற்கு, அந்த நிர்வாகத்துடன் கலந்து பேசி, முன்னோட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு குறைகள் நீக்கப்பட்டு, முழுமையான பெருமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகமாக விளங்குவதற்கு உயர் கல்வி துறை துணை நிற்கும்” எனத்தெரிவித்தார்.